சேலம் வீரபாண்டி ஒன்றியம் குட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரன். இவர் தனது நண்பர்கள் நந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஆறு நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள உணவகத்துக்கு உணவருந்தச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே உணவு உண்டு கொண்டிருந்த ஆத்துக்காடு பகுதியைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல், அவர்களைச் சாதிப் பெயரைச் சொல்லித் தாக்கியதாகவும், முட்டி போட வைத்து கொடுமைப் படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த உறவினர்களும், கிராம மக்களும் அப்பகுதியில் திரண்டதால், தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்துத் தப்பிச் சென்றுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த பவித்ரன், நந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
‘கீழடி வரலாறு ஆண், பெண், சாதி பேதம் இல்லாதது’ - சு.வெங்கடேசன்
இதுகுறித்து தகவலறிந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலச் செயலாளர் சரஸ்ராம்ரவி, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் கண்ணன், தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் பிரகாஷ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இதுபோன்ற சாதிய கொடுமைகள் நடப்பது மனித சமூகத்திற்கு எதிரானதாகும். உணவு விடுதியில் சமமாக அமர்ந்து சமபந்தி போஜனம் உண்டதற்காக இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளோம்.
மேலும் தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இந்த சம்பவத்திற்கு நியாயம் வேண்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்" என்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.