சேலம் மாவட்டத்தில் மிக வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது போன்று வேகமாகப் பரவி வரும் காய்ச்சலை தடுத்திட மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், திமுக தலைவர் அறிவுறுத்தலின் படி, சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி, கிச்சிபாளையம் பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜேந்திரன் கலந்து கொண்டு, அப்பகுதியில் உள்ள குழந்தைகள் உள்பட பொது மக்களுக்கு நில வேம்பு குடிநீரை வழங்கினார். மேலும் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு அறிக்கையை பொது மக்களுக்கு விநியோகித்து, மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படியும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினார்.
முன்னதாக அவர் பேசுகையில், சேலத்தில் சுகாதார துறைக்கு ஒதுக்கபடும் நிதி அனைத்தும் மக்களுக்கு பயன்படுத்தாமல் சம்மந்தப்பட்ட அமைச்சருக்கு சென்றடைவதாகக் குற்றம் சுமத்தினார். மேலும் தமிழ்நாட்டில் மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இதற்கு பொது மக்கள் தக்க பாடம் புகட்டிட வேண்டும் எனவும் பேசினார். இந்நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் சுபாசு, மாநில தீர்மான குழு உறுப்பினர் தாமரை கண்ணன், கிச்சிபாளையம் பகுதி செயலாளர் ஜெய், மத்திய மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்க:
36 மில்லியன் இந்தியர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் - அதிர்ச்சி தகவல்