மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து ஒரு வாரமாக உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான மலைமேல் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யும் விழா சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது. கோவில் உற்சவரான சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
வைரக்கல் பதித்த கிரீடத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி கையில் செங்கோல் பிடித்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடந்த ஆண்டு பக்தர்கள் கூட்டத்தில், அரோகரா கோஷம் முழங்க நடைபெற்ற பட்டாபிஷேக நிகழ்ச்சி, இந்தாண்டு கரோனா அச்சத்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பக்தர்கள் கூட்டம் இன்றி எளிமையாக நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான மலைமேல் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக மூன்றரை அடி உயர கொப்பரையில், 350 லிட்டர் எண்ணெய், 150 மீட்டர் காடா துணியுடன் கொண்ட திரி, 5 கிலோ கற்பூரம் வைத்து தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நாளை காலை முதல் கோவில் திறக்கப்பட்டு சாமி தரிசனத்துக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும், மலைமேல் தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி ஆர்ப்பாட்டம்!