மேலக்குயில்குடியில் உள்ள ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான தேநீர் கடையில், அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(45) வேலைசெய்து வந்தார். கடந்த சனிக்கிழமையன்று திடீரென காணாமல் போன பாலகிருஷ்ணனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தேநீர் கடைக்கு அருகேயுள்ள மேலக்குயில்குடி சமணமலையை ஒட்டி அமைந்திருக்கும் கல்குவாரிக் குட்டையில், நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, நாகமலைப் புதுக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன்பின் தீயணைப்பு படை வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உடலை மீட்கும் பணி இரவு 8.30 மணியளவில் தொடங்கியது.
மிக ஆழமான இக்குட்டைக்குள் வீரர்கள் இறங்கி உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அப்போது இறந்த நபர், தேநீர் கடையில் வேலை பார்த்த, காணாமல் போன பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.