மதுரை: மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அரசு சொத்துகளை வாங்கும்போது தங்களது மூத்த அலுவலர்களிடம் உரிய தகவலை வழங்க வேண்டும். வீடு கட்டுவது, விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு கூட உயர் அலுவலர்களிடம் உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தங்களின் கடமையை செய்ய யாரிடமும் பணமோ, பொருளோ நிர்ப்பந்திக்கக் கூடாது. ஆனால் லஞ்சம் வழங்கினால் மட்டுமே பணி முடியும். பெரும்பாலான உயர் அலுவலர்கள் ஊழலில் ஈடுபடும் கீழமை அலுவலர்களை பாதுகாக்கும் வகையிலேயே செயல்படுகின்றனர். இதனால் அலுவலர்கள் எவ்வித அச்சமும் இன்றி தொடர்ச்சியாக ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் துணையோடு சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி இந்த அலுவலர்கள் தப்பித்து விடுகின்றனர். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த ஊழல் முறைகேட்டில் பங்குள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே ஊழல் தடுக்கப்படும்.
ஆகவே மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசு துறைகளில் நடைபெறும் ஊழல் மற்றும் சட்டவிரோதங்கள் குறித்து கண்காணிக்க சிறப்பு பறக்கும் படையை அமைக்க உத்தரவிட வேண்டும். மேலும் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு அனுப்பப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறைக்கோ, அலுவலருக்கோ அனுப்பப்படக்கூடாது என உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, துரைசுவாமி அமர்வு, "இது பொருளாதார நாட்டின் வளர்ச்சியை சீர் குலைக்கிறது, இந்த விவகாரம் ஆழமானது.
சாதாரண மனிதர்களும் குறுக்கு வழியை ஊக்குவிக்கின்றனர் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த ஊழல் வழக்கு குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதில்மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:மக்களுக்கு அறிவுரை வழங்க முதலமைச்சருக்கு அறிவுறுத்திய ஓபிஎஸ்!