மதுரை: நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள குவாரிகளிலிருந்து எம்-சாண்ட் மணல் விற்பனை செய்வதற்கு அரசிடம் அனுமதி பெற்றுவிட்டு, அந்தப் பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் மணலை எடுத்து அதனை முறைகேடாகக் கடத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக கேரள மாநிலம் பத்தனம்திட்டா பிஷப் சாமுவேல் மார்க் இரேனியல் (69), பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜியோ ஜேம்ஸ், ஜோஸ் சமகாலா, ஜோஸ் கலவியால் ஆகிய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த ஆறு பேரும் தங்களுக்குப் பிணை வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தனர். மனுவில், "நாங்கள் மணல் கடத்தலில் ஈடுபடவில்லை. குறிப்பிட்ட சொத்து பத்தனம்திட்டா மறைமாவட்ட கத்தோலிக்கச் சபைக்குச் சொந்தமானது.
அதன் உரிமையாளராக நாங்கள் இருப்பதால் எங்களைக் கைதுசெய்துள்ளனர். எனவே வழக்கிற்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எனவே எங்களுக்குப் பிணை வழங்க வேண்டும்" என மனு தாக்கல்செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் முன்னிலையாகி, "மணல் கடத்துவதாகச் சொல்லக்கூடிய இடம் பத்தனம்திட்டா மறைமாவட்டத்திற்குச் சொந்தமானது.
அதன் உரிமையாளராக இருப்பதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்குப் பிணை வழங்க வேண்டும்" என வாதிட்டார். மனுதாரரின் வாதத்தை ஏற்ற நீதிபதி பிஷப் சாமுவேல் உள்பட ஆறு நபர்களுக்கும் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: பிப். 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு