மதுரை: விருதுநகர் மாவட்டத்தைச்சேர்ந்த சீனி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், "விருதுநகர் மாவட்டம், வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழா பல ஆண்டுகளாக எந்த பிரச்னையுமின்றி சுமுகமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கோயில் பொங்கல் திருவிழாவை ஆக.19 முதல் 20 வரை நடத்துவதற்குத் திட்டமிட்டு, காவல் துறையிடம் அனுமதி கோரினோம். இதுவரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, திருவிழா நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை இன்று (ஆக.16) விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல் துறையினரிடம் அனுமதி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்புத் தருகின்றனர். எனவே, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை" எனக் கூறி திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மாதவரத்தில் ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்