மதுரை: தெற்கு ரயில்வேயில் உள்ள 5,087 கி.மீ. ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 4,204 கி.மீ. தூரம் உள்ள 83 சதவீத ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இந்த மின் பாதைகளை ரயில்வே மின்பாதை பிரிவு பராமரிக்கிறது. ரயில்கள் இயக்க மின்சாரம் வழங்குவதை உறுதி செய்கிறது. மின்சார இன்ஜின்களை இயக்க 25,000 வோல்ட் மின்சாரம் வழங்குவதற்கு உள்ள உப மின் நிலையங்களை பராமரிப்பதும் இந்த பிரிவின் வேலையாகும்.
ரயில்களை காலந்தவறாமல் இயக்க 24 மணி நேரமும் மின்பாதை ஊழியர்கள் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. மின் பாதையில் உள்ள பல்வேறு மின்சார வழங்கல் உபகரணங்களை மின்பாதை ஊழியர்கள் பணி முகத்திறமைகளுடன் கையாளுகிறார்கள். தொடர் நவீனமயத்திற்கேற்ப தங்களை தயார் செய்து கொள்கிறார்கள். இவர்கள் குழுவாக பாதுகாப்பாக பணியாற்றுகிறார்கள்.
பராமரிப்பிற்காக "டவர் வேகன்" எனும் ரயில் பாதையில் இயங்கும் சிறிய ரயில் பெட்டியை பயன்படுத்துகிறார்கள். கோட்ட அலுவலகத்தில் உள்ள மின்பாதை கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் மின் பாதை செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது. தொலை தூரத்தில் மின் பழுது ஏற்பட்ட இடத்தை கண்டுபிடிப்பது, பழுது உள்ள இடத்தில் மின்சாரத்தை துண்டிப்பது போன்ற பணிகளை கோட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. மின் பாதையில் பறவைகள் கூடு கட்டுவது வழக்கம். இதனால் பழுது ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாய்ப்பிருக்கிறது. இதற்காக கண்கானிப்பிற்காக தினமும் ரயில் பாதையில் நடந்து செல்லும் "லைன்மேன்கள்" பறவைக் கூடுகளை கவனமாக அகற்றி மின்பாதை பழுதை தவிர்த்து வருகிறார்கள்.
விபத்து மற்றும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் மின் பாதை பழுதுகளை உடனுக்குடன் சென்று சரி செய்து ரயில் போக்குவரத்து தாமதம் இல்லாமல் செயல்பட உதவுகிறார்கள் என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திண்டுக்கல் - மயிலாடுதுறை, திருநெல்வேலி - ஈரோடு ரயில்கள் ஜூலை 11 முதல் இயக்கம்