ஈரோடு:தேசிய நெசவாளர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் பாஜக நெசவாளர் அணி சார்பில் விழா நடைபெற்றது. முன்னதாக 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருந்து அண்ணாமலை தலைமையில் தேசிய கொடியுடன் பேரணியாக வந்தனர். பின்னர் விழாவில் நெசவாளர் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து வீர வால் பரிசாக வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ‘மத்திய அரசு நெசவாளர் நலன் காக்க எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் திமுக அரசு பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை ரேஷன் கடை மூலம் ஏழை மக்களுக்கு விநியோகிக்க இதுவரை நூல் வாங்க டெண்டர் விடவில்லை’ என கூறினார்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் 1.80 கோடி வேட்டி, 1.80 கோடி சேலை மக்களுக்கு வழங்க ஜூலை முதல் உற்பத்தி துவங்கும். அப்போது தான் ஐந்து மாதங்கள் உற்பத்தி முடிந்து ஜனவரி மாதம் மக்களுக்கு வேட்டி சேலை வழங்கப்படும். ஒரு வேட்டி விலை 70 ரூபாய் மற்றும் சேலை விலை 200 ரூபாய் ஆகும். இதன் மூலம் நெசவாளர்கள் 486 கோடி பெறுவார்கள் ஆனால் வெளிமாநிலங்களில் இந்த வேட்டி சேலை வாங்கி அதனால் பத்திலிருந்து இருபது சதவீதம் கமிஷன் பெற திமுக திட்டமிடுகிறது.
எனவே பாஜக நெசவாளர் அணி உடனடியாக வேட்டி சேலை உற்பத்தியை துவக்க வேண்டும் என போராட்டம் நடத்த வேண்டும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் நெசவாளர்களுக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வழங்கும் இலவச மின்சாரத்தை 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் ஆக உயர்த்த உறுதி அளித்தது. ஆனால் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதற்கு பதில் யூனிட் மின்சாரம் 70 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே எந்த மாநிலமும் இந்த அளவு மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பட்டியலினத்தவர் விசைத்தறி குழுமம் அமைக்க 25 லட்சம் வரை மானியம் அளிக்கப்படுகிறது. துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டில் இந்த மானியத்தை யாரும் பயன்படுத்தவில்லை" என்றும் கூறினார்.
இதையும் படிங்க:கடந்த ஆட்சியில் சுடுகாட்டை மறித்து கட்டப்பட்ட அம்மா மினி கிளினிக் - மா.சுப்பிரமணியன்