கரோனாவால் ஊரடங்கு பிறபிக்கப்பட்டிருந்த நிலையில் பணியில் இருந்த காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கோவையில் கடந்த 15 நாள்களுக்கும் முன் கரோனா தடுப்பு பணியிலிருந்த காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 6 பேர் இன்று காலை குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை மாநகர காவல் ஆணையர் சுஜித் குமார் ஆகியோர் மலர் செண்டு, பழங்களை அளித்து கைதட்டி வழியனுப்பி வைத்தனர். இன்று மாலை ஒருவர் வீடு திரும்ப உள்ளார்.
இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கோவையில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 146 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 134 பேர் குணமடைந்து வீடு திரும்ப உள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று 7 காவலர்கள் வீடு திரும்ப உள்ளனர். மீதி நான்கு பேர் மட்டுமே கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.