தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் வேலைக்குச் சென்று தங்கள் குடும்பத்தை நடத்திவந்த நிலையில் முழு ஊரடங்கால் வேலையின்றி உணவுக்காகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு அரங்கன் அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சி அண்ணா நகர், இந்திரா நகர் பகுதிகளில் வசிக்கும் 700-க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு நாள்தோறும் மதிய உணவு வழங்கத் திட்டமிடப்பட்டது.
மதிய உணவுத் திட்டம்
இதையடுத்து நேற்று (ஜூன் 1) அப்பகுதியில் பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் நாள்தோறும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, "பொள்ளாச்சி பகுதியில் அதிகளவில் தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்கு அதிகளவில் வர்த்தகம் நடைபெறும் பகுதி.
ஆகவே, அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து காய்கறி, உணவுப்பொருள்கள் வாங்குவதற்காக வருகின்றனர்.
அனைவருக்கும் தடுப்பூசி
இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. தற்போது பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தொற்று எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
இறப்பு எண்ணிக்கையைத் தடுக்க மாநில அரசு ஒன்றிய அரசிடமிருந்து நிதி பெற்றோ அல்லது நிதி ஒதுக்கியோ உடனடியாக பொள்ளாச்சியின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும்" என்றார்.