கோயம்புத்தூர்: தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணமாக கோவை மண்டலத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட பின்னர் பல்லடம் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது தொழிலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக அனைத்து வகை ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் என்பதை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் ஆட்சி அமையும் பட்சத்தில் அவை நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், ஏழ்மை குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு 72,000 பெறுவதை உறுதி செய்வோம் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பணமதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) என்பது திட்டமிட்டு தொழிலாளர்களின் சிறு குறு தொழில்களையும் முடக்குவதற்காக மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. இதனை ஊடகங்கள் ஆதரிக்கும் வகையில் நடந்து கொள்கின்றன.
இந்தியாவில் ஒரு சில ஊடகங்கள் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. ஏழைகளின் சக்தியை மத்திய அரசு உணராமல் உள்ளது. தற்போது அந்தச் சக்தியை உணர்த்தும் வகையில் விவசாயிகள் மோடியை வெளியே வர முடியாத அளவு செய்துவருகின்றனர்.
மத்திய அரசு பணக்காரர்களுக்கு வழங்கும் கடனை தள்ளுபடி செய்வது போல் ஏன் ஏழைகளுக்கு வழங்கும் கடனை தள்ளுபடி செய்வது இல்லை. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி மருத்துவம் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
இருவகையான இந்தியாவாக இருப்பதில் விருப்பமில்லை. வங்கிகளிலிருந்து ஏழைகளுக்கும் சிறு குறு தொழில் புரிவோருக்கு உதவிகள் கிடைத்திட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் நோக்கம் வறுமையை ஒழிப்பதே இது மக்களை சென்றடைய வேண்டும்.
மத்தியில் ஆளுகின்ற அரசு மொழிவாரியாக மதவாரியாகவும் பிரித்தாளுகிறது. ஆனால் எங்களின் நோக்கம் அனைத்தையும் ஒருங்கிணைப்பது. ஒரு நாட்டின் தலைவர் என்பவர் அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும். அகம்பாவம் கொண்டவராக செயல்பட்டால் நாடு எப்படி வளர்ச்சியடையும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.