தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் சாராயம் காய்ச்சுவதற்காக மூலப் பொருளான ஊறல் தயாரிக்கும் நபர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலியபுதூர், மாதேஷ் தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலையில் சாராயம் காய்ச்சுவதாக கோட்டூர் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆனைமலை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக அப்பகுதியில் சென்று சோதனை நடத்தியதில், சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த கனகராஜ், லோகநாதன், பரமசிவம் உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்த காவல் துறையினர் 20 லிட்டர் ஊறல், 2 லிட்டர் சாராயம் மற்றும் அடுப்பு சிலிண்டரை பறிமுதல் செய்தனர்.
பின்னர் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.