சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கரோனா தொற்று காரணமாக முடங்கிய பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள வழி இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கும் நிலையில் மத்திய பாஜக அரசு சமையல் எரிவாயு விலையை தாறுமாறாக உயர்த்தி இருக்கிறது.
பிப்ரவரி 4 ஆம் தேதி சமையல் எரிவாயு விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நேற்று 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு 785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல விலையை உயர்த்திக் கொண்டு இருக்கின்றன. கடந்த மூன்று மாதத்தில் சமையல் எரிவாயு உருளையின் விலை 125 ரூபாய் அதிகரித்துள்ளது.
மக்களை கசக்கிப் பிழிந்து வரும் மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயையும் 85 ரூபாயையும் நெருங்கிவிட்டது. இதற்கு எண்ணெய் உற்பத்தி நாடுகளில் கரோனா காலத்தில் உற்பத்தி குறைந்ததுதான் காரணம் என நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார்.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லை. அதற்கு காரணம் சில்லறை விற்பனையில் மத்திய அரசு 61 விழுக்காடு வரி விதிக்கிறது. மாநில அரசு 56 விழுக்காடு வரியைத் தன் பங்காக விதிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்தால் அவற்றின் சில்லறை விற்பனை விலையை குறைக்க முடியும். சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை ரத்து செய்வதுடன், பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும் மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க; பிரதமரின் பரிசா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு?