சென்னை: தாம்பரம் மாநகராட்சி 20ஆவது வார்டிற்கு உட்பட்ட பல்லாவரம் கவிதா பண்ணை அருகே அம்பேத்கர் நற்பணி மன்றம், அம்பேத்கர் சிலை, இரவு பாட சாலை ஆகியவற்றைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடமானது சுமார் 75 ஆண்டுகளாக, அந்த ஊர்ப்பொதுமக்களால் பாரமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு சரவண பிரகாஷ் என்பவர், இதன் அருகே காலி மனையை வாங்கியுள்ளார்.
அதன்பின்னர் அங்கு வீடு கட்டி விட்டு அம்பேத்கர் பாடசாலை சுற்றுச்சுவர் ஆக்கிரமித்து கட்டி இருப்பதாகவும், அதனை இடித்து தனது வீட்டிற்கு வழிவிடுமாறு சரவணபிரகாஷ் வருவாய்த்துறையினரிடம் மனு அளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்கு உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் இவர் சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், அம்பேத்கர் சிலை மற்றும் இரவு பாடசாலை நடுவேயுள்ள சுற்றுச்சுவரை இடிக்க வேண்டும் என தொடர்ந்து அரசு அலுவலர்களுக்கு அழுத்தம் தர நேற்று(பிப்.24) பல்லாவரம் வட்டாட்சியர் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் வந்து, சுற்றுச் சுவரை இடிக்க முயன்றுள்ளனர்.
இதற்கு அம்பேத்கர் நற்பணி மன்றத்தினர், ஊர்ப்பொதுமக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தினர். இதனால் இடிக்கும் பணி கைவிடப்பட்டது.
இந்தநிலையில் இடிக்க வந்த அலுவலர்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்து இன்று(பிப்.25) இரண்டாவது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, சம்பவ இடத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் இந்த இடத்தை இடிக்க எடுத்த முடிவை கைவிட வேண்டும் என வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் திருமாவளவன் தொலைபேசியில் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: திமுகவில் சங்கமமாகிறதா அதிமுக? - ஐ.பி.க்கு ஓபிஎஸ் சொன்ன 'நச்' பதில்!