சென்னை: ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் பாடல் பெற்ற திருக்கோயில்களில் பணிபுரியும் நாதஸ்வரம், தவில், தாளம் இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியத் தொகையை மூன்று மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி அன்று நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஆழ்வார்கள், நாயன்மார்களால் பாடல் பெற்ற திருக்கோயில்களில் பணிபுரியும் நாதஸ்வரம், தவில், தாளம் இசைக்கும் இசைவாணர்களுக்கு முறையே வழங்கப்படும் மாத ஊதியத் தொகையினை மைய நிதியிலிருந்து ரூ.1,500, ரூ.1,000, ரூ.750-இல் இருந்து, ரூ.4,500, ரூ.3,000, ரூ .2,250 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, இத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிதி வசதியற்ற திருக்கோயில்களில் பணிபுரிந்து, நாதஸ்வர இசைப்பணியாளர் நிதியிலிருந்து மாத ஊதியம் பெற்று வரும் நாதஸ்வரம் பணியாளர்களின் மாத ஊதியத்தினை ரூ.1,500-இல் இருந்து ரூ.4,500 ஆகவும், தவில் பணியாளர்களின் மாத ஊதியத்தினை ரூ.1,000 லிருந்து ரூ.3,000 ஆகவும், தாளம் பணியாளர்களின் மாத ஊதியத்தினை ரூ.750 லிருந்து ரூ.2,250 ஆகவும் உயர்வு செய்து ஆணையிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அழகிரி தேர்தல் பங்களிப்பை வரவேற்கிறேன் - அண்ணாமலை