இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அங்கீகாரம் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள துணைவேந்தர் சூரப்பாவின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தனது அதிகார எல்லையைத் தாண்டி மத்திய அரசுக்கு நேரிடையாக கடிதமெழுதி அண்ணா பல்கலைக்கழகத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து அபகரிக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிற அளவுக்கு அதிகாரம் தந்தது யார்? இதுவெல்லாம் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு தெரிந்துதான் நடக்கிறதா? இது குறித்து தமிழ்நாடு அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காதது? என நீளும் எந்த கேள்விகளுக்கும் விடையில்லை.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அங்கீகாரம் தந்தாலும் நிதிச்சுமையை மாநில அரசு அரசு தான் கவனித்துக்கொள்ள வேண்டும் எனக்கூறும் மத்திய அரசு, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு இதுவரை எவ்வித உறுதிப்பாடும் தராத நிலையில் துணைவேந்தர் சூரப்பா தான்தோன்றித்தனமாக முடிவெடுத்து மத்திய அரசுக்கு கடிதமெழுதியிருப்பது வெளிப்படையாக நிகழ்ந்தேறிய அதிகார அத்துமீறலாகும்.
மாநில அரசின் நிதிப்பங்களிப்பு இல்லாமலேயே ஐந்தாண்டுகளுக்கு 1,500 கோடிவரை நிதித் திரட்டிக்கொள்ள முடியும் எனக்கூறிய மத்திய அரசு, அண்ணா பல்கலைக்கழகத்தை கையகப்படுத்த துணைவேந்தர் துணைபோவது பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தைச் சிதைத்து தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகமாகும். மாநிலத்தன்னாட்சியைத் தனது உயிலெனக் கொண்டிருந்த அண்ணாவின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தையே மாநில கட்டுப்பாட்டிலிருந்து மத்திய அரசின் கையடக்கத்தில் கொண்டு செல்வதற்கான முயற்சியை தமிழ்நாடு அரசு இன்னும் வேடிக்கைப்பார்ப்பது வெட்கக்கேடானது.
தமிழ்நாட்டின் தனித்துவமிக்க உயர்கல்வி அடையாளங்களுள் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தை சிறப்பு அங்கீகாரத்தின் மூலம் மத்திய அரசு எடுத்துக்கொண்டால் அது தமிழ் இளையோர்க்கான வாய்ப்பை மொத்தமாக பறித்து வடநாட்டவர்களின் வருகைக்கு வாசல் திறந்துவிடும் அபாயமுள்ளது. ஆகவே, பல்கலைக்கழக துணைவேந்தரின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அது அரசின் நிலைப்பாடு இல்லை என்பதை தெளிவுப்படுத்தி அண்ணா பல்கலைக்கழகத்தை காக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.