நாட்டின் 72ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் வேளையில், சென்னை மெரினா காமராஜர் சாலையிலுள்ள காந்தி சிலையருகே இன்று முன்றாம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரின் வாகன ஒத்திகை நடைபெற்றது. பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சிகளும், தேசிய மாணவர் படை, மத்திய தொழிற்படை (ஆர்பிஎப்), தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்பு படை வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகைகளும், தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் காவல் துறையினரின் அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்றது.
இந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல பொது மக்களுக்கும் நிகழ்ச்சியை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதி நாள் ஒத்திகைக்காக சென்னை காமராஜர் சாலையை இணைக்கக் கூடிய அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் செல்வதற்கு தடைசெய்யப்பட்டிருக்கிறது.