தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக மூத்த ஐஏஎஸ் அலுவலர் ராஜேஷ் லக்கானியை நியமித்துத் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இந்தப் பொறுப்பில் ஏற்கெனவே பணியாற்றி வந்த பங்கஜ் குமார் பன்சாலுக்குப் பதிலாக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றிய ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், பின்னர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறைக்கு 2020ஆம் ஆண்டு மாற்றப்பட்டார்.