இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிழக்குத் திசை காற்றலைகளின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் தென் தமிழ்நாட்டு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
நாளை (பிப். 3) முதல் வரும் பிப். 6ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த இரண்டு நாள்களுக்கு காலை நேரங்களில் வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை இன்று (பிப். 2) முதல் நாளை மறுநாள் (பிப். 4) வரை மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வடகிழக்குத் திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பங்குச்சந்தையில் சிறப்பான அறிமுகம் கண்ட இண்டிகோ பெயிண்ட்ஸ்