காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர்ப் பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தின் அருகே, தனியார் தொழிற்சாலை பேருந்து ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடும்கோடை வெப்பம் காரணமாக பேருந்தின் இருக்கைகள் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கின. இருக்கைகளில் பற்றிய தீ, மளமளவென பேருந்து முழுவதும் பரவத்தொடங்கியது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், பேருந்தில் பற்றி எரிந்த தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது. பேருந்தில் யாருமில்லாத காரணத்தால் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காஞ்சி தாலுகா போலீசார், கோடை வெயிலின் தாக்கத்தால்தான் பேருந்து தீப்பற்றியதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சொக்கம்பட்டியில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம்!