சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்ட நாளன்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 200 பேர் விதிகளை மீறி, ஊர்வலமாக சென்று கல்லூரி வளாகத்திலுள்ள சிலைக்கு மாலை அணிவித்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பேருந்தில் அட்டகாசம் செய்தது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை புறநகர் ரயிலில் பச்சையப்பன், பிரெசிடென்சி கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் ரயில்வே காவல் துறையினர், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
காவல் ஆணையரின் உத்தரவு
இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் சிலர் தங்களை, “ரூட்டு தல” எனக் கூறிக் கொண்டு மோதலில் ஈடுபட்டு வருவதை தடுக்கவும், பேருந்து தினம் கொண்டாடுவதை தடுக்கவும் காவல் துறை உயர் அலுவலர்கள் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று, மாணவர்களுக்கு அறிவுரை வழங்குமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.
மாணவர்கள் மீது நடவடிக்கை
அதனடிப்படையில் கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு நேற்று (செப்.07) கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆணையர் ரமேஷ், காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, ரயில்வே காவல் துறையினர் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கல்லூரி மாணவர்கள் மோதல், தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடுவதன் மூலம் வழக்கில் சிக்கும்போது, கல்லூரி மாணவர்கள் வாழ்க்கை பாதித்து என்னென்ன மாதிரியான பிரச்சினைகளை அவர்கள் எதிர்காலத்தில் சந்திப்பார்கள் என காவல் துறையினர் எடுத்துரைத்தனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் இரு கல்லூரி மாணவர்களிடையே மோதல்!