பத்ம விருது பெற்ற அமர் சேவா சங்க நிறுவனர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளரும், பார்வை இழந்த ஓவியக் கலைஞருமான மனோகர் தேவதாஸ் ஆகிய இருவரையும் கௌரவிக்கும் நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.
இதில், வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன், இந்து குழுமத் தலைவர் என்.ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய எஸ்.ராமகிருஷ்ணன், ”பத்ம ஸ்ரீ விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் எங்களுடைய பொறுப்பு அதிகரித்துள்ளது. இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி பொதுமக்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால், சமூகத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறந்த குடிமக்களாக செயலாற்ற முடியும். நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு நிறைய வசதிகள் செய்யப்பட வேண்டியுள்ளது“ என்றார்.
![மாற்றுத் திறனாளிகளுக்கு ஒத்துழைப்பு- பத்ம ஸ்ரீ எஸ்.ராமகிருஷ்ணன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-padma-awardees-felicitation-7208446_16032020181141_1603f_02231_1044.jpg)
அமர் சேவா சங்கத்தின் செயலாளர் சங்கரராமன் பேசுகையில், ”ராமகிருஷ்ணனின் முயற்சியும், உன்னத நோக்கமும் மாற்றுத்திறளானிகளுக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு. கடுமையான சவால்களில் இருந்து மீண்டு, தனக்கு ஏற்பட்ட விபத்தை தடையாகவோ, பின்னடைவாகவோ நினைக்காமல் அதையே ஒரு படியாக எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். 15 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு தென் தமிழகத்தில் பல்வேறு பணிகளை அமர சேவா சங்கம் செய்து வருகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய பத்மஸ்ரீ விருது பெற்ற படைப்பாளி மனோகர் தேவதாஸ், ”கண் பார்வை போனாலும் நுணுக்கமான படங்கள் வரையக் காரணம் என் மனைவிதான். நான் படம் வரையும் போது என் மனைவி அருகில் இருந்து நிறைய புத்தகங்கள் வாசிப்பார். என் மனைவி 35 ஆண்டுகள் என்னுடன் இருந்தார். அப்போது குறைந்தபட்சம் 5 ஆயிரம் மணி நேரமாவது எனக்கு புத்தகம் வாசித்திருப்பார். தற்போது என் மனைவியின் மரணத்திற்குப் பிறகும் புத்தகங்கள் எழுதி வருகிறேன். பத்மஸ்ரீ விருது எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி. மேலும் ஆர்வத்துடன் பணியாற்ற இது ஊக்கமளிக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய புதுச்சேரி ஆட்சியர்!