சென்னை: அடையாறு டிஜிஎஸ் சாலையில் இருந்து கிரீன்வேஸ் சாலைக்கு செல்லும் வழி ஒருவழிப்பாதை. பாதுகாப்பு கருதி அமைச்சர்கள் மட்டும் அவ்வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது போக்குவரத்து காவல் துறையினர் தடுப்புகளை நகர்த்தி அமைச்சர்களின் கார்கள் செல்லும் வகையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரான முத்துசாமி அடையாறு டிஜிஎஸ் சாலையிலிருந்து கிரீன்வேஸ் சாலைக்கு அவரது காரில் சென்றுள்ளார். அப்போது கிரீன்வேஸ் சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து பெண் காவலர் தடுப்புகளை நகர்த்த முடியாமல் திணறியுள்ளார். . இதை அறிந்த அமைச்சர் அடையாறு மேம்பாலத்தைச் சுற்றி மீண்டும் கிரீன்வேஸ் சாலைக்கு வந்தார்.
பின்னர் அமைச்சர் காரிலிருந்து கீழே இறங்கி போக்குவரத்து பெண் காவலரிடம் என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார். அதற்கு காவலர் பேரிகார்டு நகர்த்த கஷ்டமாக இருப்பதாகவும், எப்போதும் வாகன ஓட்டி ஒருவரை உதவிக்கு அழைத்து பேரிகார்டை தள்ளி வருவதாகவும் கூறினார். இதனைக் கேட்ட அமைச்சர் தனது சொந்த செலவிலேயே பேரிகார்டை மாற்றி தருவதாக கூறி சென்றதாக தெரிகிறது. இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கடந்த 11 மாதங்களில் 141 சிலைகள் பறிமுதல்