சென்னை: சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக கடந்த 2008ஆம் ஆண்டு விஜயன் நியமிக்கப்பட்டார். இவரின் மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, அதே பல்கலைகழகத்தின் வளாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவர் பல்கலைகழக இயக்குநராக நியமிக்கப்பட்ட பிறகும், துணை வேந்தருக்கான வசதிகளை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால், பல்கலைகழகத்திற்கு 22 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, அந்த தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என பல்கலைக்கழகம் விஜயனுக்கு உத்தரவிட்டது.
சிபிஐ வழக்குப்பதிவு: இதேபோல, இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் பணியாற்றிய இடத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து, அவருக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடத்திய கடல்சார் பல்கலைக்கழகம், அவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து விஜயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பணி நீக்க உத்தரவு ரத்து: அவர் தாக்கல் செய்த மனுக்களில், முந்தைய பணியில், நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றத்திற்காக இந்த பதவியில் இருந்து நீக்கியது செல்லாது எனவும் துணை வேந்தருக்கான வசதிகளை பயன்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தையும் ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், இந்திய கடல்சார் பல்கலைக்கழக பணியாளர் விதிகளின்படி, இயக்குநராக உள்ள மனுதாரரை பணி இடைநீக்கம் செய்யவோ, பணிநீக்கம் செய்யவோ முடியாது எனக்கூறி, அவரது பணி நீக்கத்தை ரத்துசெய்து உத்தரவிட்டார். துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்ததும், அந்த வசதிகளை பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாமல் தற்போது அதை அபராதமாக வசூலிக்க முடியாது எனக் கூறிய நீதிபதி, அபராதம் விதித்த உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கடல்சார் படிப்புகளில் ஆர்வம் காட்டாத தமிழ்நாடு மாணவர்கள்!