சென்னை: வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து கடந்த 2013ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சித்திரைத்திருவிழா நடத்தியது. இதில் கலந்து கொள்ள வந்த பாமகவினர் காவல் துறை அனுமதியை மீறி மரக்காணம் அருகேயுள்ள கட்டயம் தெரு என்ற பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த தலைவர்களின் சிலைகள் மற்றும் ஓடை பாலம் ஆகியவற்றை சேதப்படுத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், புதுச்சேரி-மைலம் சாலையில் உள்ள கரசனூரில் உள்ள பாலத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர், ரூ.18 லட்சம் இழப்பீடாக அரசுக்கு செலுத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸூக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி பாமகவின் அப்போதைய தலைவர் ஜி.கே. மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில் கலவரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாலத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, நோட்டீஸ் அனுப்பியது தவறு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று (செப்.12) விசாரணைக்கு வந்தபோது, பாமக இழப்பீடு செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்புவதற்கு முகாந்திரம் இல்லை எனக்கூறி நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு எதிரான வழக்கு: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத்தடை