செங்கல்பட்டு: மாமல்லபுரம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கொட்டப்பட்டு வருவதாக, தனேஜா வீட்டுமனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 2018ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "பக்கிங்காம் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படும் விவகாரத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாமல்லபுரம் பேரூராட்சிக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பியது. அதன் பின்பு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை முன்னதாக விசாரித்த உயர் நீதிமன்றம், குப்பைக் கிடங்கின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய பெண் வழக்கறிஞர் என்.டி. நானே என்பவரை நியமித்தது. இந்த வழக்கு, இன்று (ஏப். 19) தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில், குப்பை கிடங்கு செயல்படவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரங்களும் அறிக்கையில் சமர்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், விதிமீறல் தொடர்பாக மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அதிகாரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், "நீதிமன்றம் நியமித்த ஆய்வு ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், "2008ஆம் ஆண்டு முதல் கிடங்கு செயல்பட்டு வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தை முறையாக பராமரித்திருக்க வேண்டும். முறையாக பராமரிக்காதது துரதிருஷ்டவசமானது. சம்பந்தப்பட்ட அதிகாரியை தண்டிக்க வேண்டும். மாமல்லபுரம் பேரூராட்சியில் நுழைவு கட்டணம் வசூலிப்பது குப்பை கிடங்குக்குள் நுழையவா? என்று கேள்வி எழுப்பினர். அத்துடன் அரசு தரப்பு அறிக்கையை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: மின் விளக்குகளால் ஒளிரும் மாமல்லபுரம்