சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.10.2022) காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய “குட்டி காவலர்” என்னும் மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இளம் பள்ளிக்குழந்தைகளுக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலைப்பாதுகாப்பினை கற்பித்து, அவர்களை சாலைப்பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே 'குட்டி காவலர்' திட்டத்தின் நோக்கமாகும். சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பரப்பும் வகையில், முதலமைச்சர் தலைமையில் 5,000 மாணவர்கள் கோயம்புத்தூர், கொடிசியா வர்த்தக மையத்திலும், 4.50 லட்சம் மாணவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அந்தந்த பள்ளி வளாகத்திலும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, “குட்டி காவலர்” திட்டத்தின்கீழ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு குறித்த மாணவர் பயிற்சி கையேட்டினையும், ஆசிரியர்களுக்கான வழிகாட்டி புத்தகத்தையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அதிக அளவிலான எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்கும் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஆசிய சாதனை புத்தகமான Asia Book of Records-ல் இடம்பெற்று அதற்கான சான்றிதழ் தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.
![Little Guard road safety awareness program for school children started](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-tn-7209106_12102022113857_1210f_1665554937_411.jpg)
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்கக்கோரி அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்!