தேனி: உப்பார்பட்டியைச் சேர்ந்த ஞானராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், "வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில், அரசு நிலங்களிலிருந்து, அனுமதியின்றி, 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஓ. பன்னீர்செல்வம், தனது உதவியாளர் அன்னபிரகாசம், அவரது உறவினர்கள் ஆகியோர் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
அரசு நிலங்களிலிருந்து மணல் எடுத்த பிறகு, அந்த நிலங்கள் தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு முடித்துவைப்பு
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில், கனிமவளத் துறையைச் சேர்ந்த ஐந்து அலுவலர்கள், வருவாய்த் துறையைச் சேர்ந்த ஆறு அலுவலர்கள், ஒரு தனி நபர் என மொத்தம் 12 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கைத் தாக்கல்செய்யப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி. சந்திரசேகரன் முன்பு இன்று (பிப்ரவரி 18) விசாரணைக்கு வந்தபோது லஞ்ச ஒழிப்புத் துறைத் தரப்பில், "ஓ. பன்னீர்செல்வத்தின் உதவியாளர் அன்னபிரகாசம், வருவாய்த் துறை, கனிமவளத் துறை அலுவலர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், ஞானராஜன் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இளையராஜா பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த தடை - உயர் நீதிமன்றம்