சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேரமில்லா நேரம் இல்லாத கூட்டமாக நடந்தது. மாமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு இன்று கூடிய இரண்டாவது மாமன்றக் கூட்டத்தில் 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பொறுத்த வரையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த பொது கழிப்பிடங்களை இடிப்பதற்கான தீர்மானம், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கண்காட்சி அமைப்பதற்கான செலவினங்கள், பள்ளிகளில் பாலியல் குழுக்கள் அமைப்பதற்கும், தொண்டு நிறுவனங்கள் மூலமாக 32 சென்னை மழலையர் பள்ளிகளுக்கு மாண்டிசோரி உபகரணங்கள் நிறுவி பயிற்சி அளிக்க அனுமதி அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியருக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு செட் சீருடைகளை கொள்முதல் செய்யவும், அனைத்து சென்னை மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இளைஞர் பாராளுமன்றம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தவும்
சென்னைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அவசர செலவு நிதி வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியிலிருந்து 44 காம்பாக்டர் வாகனங்கள், 30 இலகுரக காம்பாக்டர் வாகனங்கள், ரோபோட்டிக் மல்டி பர்ப்பஸ் எக்ஸ்வேட்டர் உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் இடித்து புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு பணியேற்பு கடிதங்கள் வழங்குவதற்கான அனுமதி கோரும் தீர்மானம், அடையாறு ஆற்றங்கரையில் மரங்கள் நட்டு இரண்டு ஆண்டுகள் பராமரிக்கும் பணிக்கு அனுமதி வழங்கும் தீர்மானமும் நிறைவேறியது.
இத்துடன் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நவீனமயமாக்கப்பட்ட ஒளிரும் சீருடையை கொள்முதல் செய்வதற்கு நிர்வாக அனுமதி கோரும் தீர்மானமும் சொத்துவரி பொது சீராய்விற்கான அறிவிப்பினை சொத்து உரிமையாளர்களுக்கு தபால்துறை மூலம் விநியோகம் செய்ய பணியாணை வழங்கியதற்கும் அதற்கான செலவினத்திற்கும் அனுமதி கோரிய தீர்மானம் நிறைவேறியது.
சென்னை மாநகராட்சி பணியில் இருந்து குறிப்பிட்ட அலுவலர்கள் வயது முதிர்வு ஓய்வு மற்றும் தன் விருப்ப ஓய்வில் செல்வதற்கும் சென்றதற்கும் குறிப்பிட்ட அளவில் பணிக்காலத்தை பணி வரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் முடித்தவராக அறிவிக்க தீர்மானம் நிறைவேறியது.
மேலும், அரசாணையின்படி முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து கரோனா நோய் தொற்று ஏற்பட்டு காலமான பணியாளருக்கு 25 லட்சம் வழங்க அனுமதி அளிக்கும் தீர்மானம் மற்றும் தியாகராய சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்காண நிறுத்த கட்டடத்தை உயர்தர வாகனம் நிறுத்த கட்டணமாக உயர்த்த தீர்மானம் நிறைவேறியது.
செனாய் நகர் அம்மா அரங்கம் கலை அரங்கத்தில் வருவாயைப் பெருக்க மற்ற நிகழ்ச்சிகளுடன் குடும்ப நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கும் வாடகை நிர்ணயம் செய்ய தீர்மானம் என மொத்தம் 100 தீர்மானங்கள் நிறைவேறியது.
இதையும் படிங்க: வீடுகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்: மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக்கொண்டு பொதுமக்கள் போராட்டம்