சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 97ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மக்களவை உறுப்பினர் சுப்புராயன், மூத்த நிர்வாகி மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

முதுபெரும் தலைவர்
இந்த நிகழ்ச்சி பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "திமுக சார்பில் நல்லகண்ணு ஐயாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வாழ்த்துகளை பெற்று கொள்கிறேன். பாட்டாளி மக்கள் வர்க்கத்திற்கு மட்டும் அல்லாது நாட்டிற்காக உழைத்த அவர் நூற்றாண்டு விழாவினை காண இருக்கிறார். அதற்கும் என் வாழ்த்துகள், பல்லாண்டுகள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தை தமிழ்நாட்டில் வளர்த்தெடுத்த இரு முதுபெரும் தலைவர்களில் சங்கரய்யா, நல்லகண்ணு ஆகியோர் இடதுசாரிக் கட்சிகளில் 90 வயதைக் கடந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.
இளமையில் முதல் முதுமை வரை
அந்த இரு தலைவர்களில் ஒருவரான சங்கரய்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர். மற்றொருவரான நல்லகண்ணு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். இருவரும் ஒன்றாக இடதுசாரி இயக்கத்தில் பயணித்தவர்கள். இன்றும் பயணித்து வருபவர்கள்.
மூத்த தலைவர் நல்லகண்ணுவின் அரசியல் பயணத்துக்கு 80 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உண்டு. கீழடி பாதுகாப்பு இயக்கம், வெண்மணி போராட்டம், மதவாத அரசியல் என 18 வயது முதல் போராடி எளிமையான அரசியலுக்கு நல்லகண்ணு பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது" என்றார்.
இதையும் படிங்க: 17ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி