சென்னை: வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, கதிர் அரிவாள் ஆகிய வேளாண் உபகரண தொகுப்புகளை 64 ஆயிரத்து 444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வழங்கிடும் அடையாளமாக ஐந்து வேளாண் குடும்பங்களுக்கு வழங்கி, ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
வேளாண்மை - உழவர்களின் நலன் காத்திட வேளாண்மைத் துறையினை, நலத் துறை எனப் பெயர் மாற்றம் செய்து, உழவர்களின் வருவாயைப் பெருக்கிட வேளாண்மை உழவர் நலத் துறைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்து, தமிழ்நாட்டில் உள்ள வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.
வேளாண்மை - உழவர் நலத் துறைக்கென 2021 ஆகஸ்ட் 14 அன்று தாக்கல்செய்யப்பட்ட முதல் தனி நிதிநிலை அறிக்கையில் அன்றாட வேளாண் பணிகளை எளிதாக மேற்கொள்ள தேவைப்படும் மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புச்சட்டி கடப்பாரை, சுதிர் அரிவாள் அடங்கிய 'வேளாண் உபகரணங்கள் தொகுப்பு' அரை லட்சம் வேளாண் பெருமக்களுக்கு வழங்கப்படும் என்றும், இத்திட்டம் 15 கோடி ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க வேளாண் உபகரணங்களான கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, இரண்டு கதிர் அரிவாள்கள் ஆகிய ஆறு உபகரணங்கள் அடங்கிய ரூ. 3,000 மதிப்பிலான வேளாண் உபகரணங்கள் தொகுப்பு 64 ஆயிரத்து 444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.15 கோடி மதிப்பில் வழங்கப்படும்.
பழங்குடியின உழவருக்கு முன்னுரிமை
மேலும், இத்திட்டத்தின் வாயிலாக இவ்வேளாண் உபகரணங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு பொது விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியம் அல்லது ரூ. 2,250 மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 90 விழுக்காடு மானியம் அல்லது ரூ.2700 மிகாமலும் வேளாண் உபகரணங்கள் வழங்கப்படும். ஒரு வேளாண் குடும்பத்திற்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.
இத்திட்டமானது சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் உழவன் செயலி வாயிலாக விருப்பமுள்ள விவசாயிகள் பதிவுசெய்து பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக சிறு, குறு விவசாய பெருமக்களின் உழைப்புத் திறன் மேம்படுத்தப்பட்டு, உற்பத்தித் திறன் அதிகரிக்கும். அதனைத் தொடர்ந்து வேளாண்மை - உழவர் நலத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 87 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, ஸ்டாலின் 10 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் வெ. இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலர் சி. சமயமூர்த்தி கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: Honour killing: ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும்: மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்