கரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. சென்னையில் தினமும் ஆறாயிரத்திற்கும் மேல் மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் இணைந்து முகக்கவசம் வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
மருத்துவ முகாமைப் பொறுத்தவரையில், வார்டுக்கு இரண்டு அல்லது மூன்று என கிட்டத்தட்ட 400 மருத்துவ முகாம்களை நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி கரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தினமும் நலன் விசாரிக்கத் தனியாக மண்டலம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவ முகாமில் மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாகப் பணிபுரிய இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.