சென்னை: வெற்றி வேல் யாத்திரை நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ள உள்ளனர்? அந்நிகழ்ச்சி எப்படி நடைபெற உள்ளது? என்ற முழு விவரங்களுடன் தமிழ்நாடு டி.ஜி.பி-யிடம் அனுமதி கேட்டு மீண்டும் விண்ணப்பம் செய்ய பா.ஜ.கட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பாஜகவின் வெற்றி வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், மாநில பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில், “நவம்பர் 16ஆம் தேதிக்கு பின் மத நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை கலந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அக்டோபர் 15க்கு பின் மத நிகழ்ச்சிகளில் விதிகளை பின்பற்றி கலந்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதித்துள்ளது.
அவசர வழக்கு
அதனால், மாநில அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, நவம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்க உள்ள வெற்றி வேல் யாத்திரையில் தலையிடக் கூடாது என அரசுக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிட வேண்டும். வேல் யாத்திரை சுமூகமாக செல்ல ஏதுவாக அனைத்து மாவட்ட காவல் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்” எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, இன்று (நவ.7) அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது பாஜக தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “கோயில்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட்ட பின் பக்தர்களுக்கு தடை விதிப்பது தவறு. கோவிலுக்குள் நுழைவதை முறைப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது.
வேல் யாத்திரை தொடக்க நாளில் ஒரு சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்கு செல்லும் போது நூறு பேருக்கு மேல் செல்ல மாட்டோம் எனத் தெரிவிக்கப்பட்டது” என்றார்.
தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பு
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கரோனா இரண்டாவது அலை பரவ வாய்ப்புள்ள நிலையில், கூட்டத்தை அனுமதிப்பது வைரஸ் பரவ மேலும் காரணமாக அமையும். முதல் நாள் யாத்திரையில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியவில்லை. அரசு தரப்பில், நவம்பர் 15க்கு பின் 100 பேருடன் மத நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது.
பாஜக அனுமதி கோரிய விண்ணப்பத்தில் எத்தனை பேர் கலந்து கொள்ள உள்ளனர் என்ற விவரங்கள் எதுவும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. யாத்திரைக்கு அனுமதி அளித்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த அரசின் உத்தரவை எதிர்த்து பாஜக வழக்கு தொடரப்படவில்லை எனத் தெரிவித்தார்.
நீதிபதிகள் உத்தரவு
இதையடுத்து, அரசியல் ரீதியான கூட்டங்கள் நடத்தப் போவதில்லை என்றால், எத்தனை வாகனங்களில்? எவ்வளவு பேர் செல்கிறீர்கள்? முருகன் கோயிலுக்கு செல்வது தான் நோக்கம் என்றால் கோயில் அமைந்துள்ள இடங்களுக்கு மட்டும் செல்ல வேண்டியது தானே? முருகன் கோயில் இல்லாத பகுதிகளுக்கு ஏன் யாத்திரை செல்கிறீர்கள்?
பருவமழை நேரத்தில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், மனுவில் எந்த விபரங்களும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், பொது அமைதி சம்பந்தப்பட்டுள்ளதால் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது.
நம் நாட்டில் அரசியல் காரணங்களுக்கு தீர்வு காணவே நீதிமன்றங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. டிசம்பர் 6ஆம் தேதி யாத்திரையை நிறைவு செய்வதாக கூறியுள்ளீர்கள். அன்றைய தேதியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒத்திவைப்பு
வேல் யாத்திரை எப்படி நடைபெற உள்ளது என்ற முழு விவரங்களுடன் டிஜிபியிடம் மீண்டும் அனுமதி கேட்டு பாஜக விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவுறித்தினார்கள். இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 10ஆம் தேதி மீண்டும் நடக்கிறது.
இதையும் படிங்க: நாளை மீண்டும் வேல் யாத்திரையை தொடங்குவோம் - வானதி சீனிவாசன்