சென்னை:சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செய்தியாளர்களைச்சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, தான் அதிபராக பதவி வகித்த காலத்திலேயே சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளார். தற்பொழுது இந்திய அரசின் தொடர் அழுத்தத்தால் சீன உளவு கப்பலுக்கு தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க அனுமதியை மறுத்துள்ளார். இருப்பினும் அந்தக் கப்பலின் பயணம் தொடர்ந்துள்ளது. அது இலங்கைக்கு வருவதில் தான் தாமதமே தவிர, அதன் பயணம் தடைபடவில்லை.
இலங்கை அரசு தன்னுடைய சர்வதேச நிலைப்பாட்டில் தெளிவில்லாமல் உள்ளது. இந்தியாவோடும் இருப்போம்; சீனாவோடும் இருப்போம் என்றால் இந்தியா அதற்கு அனுமதிக்காது. எனவே இலங்கை அரசு அவர்களுடைய சர்வதேச நிலைப்பாட்டில் தெளிவடைய வேண்டும். அதோடு இலங்கையின் வடகிழக்கில் உள்ள ஈழத்தமிழர்களுக்காக இந்திய அரசு தலையிட்டு அவர்களுக்கென சுதந்திர வாக்கெடுப்பினை நடத்த வழிவகை செய்ய வேண்டும்.
இன்றைய இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர அமைதியான அரசியல் தீர்வை காணும் நோக்கத்தில் இந்திய அரசு அவசரமாகவும் உடனடியாகவும் தலையிட்டு சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்குத் தலைமை ஏற்கவேண்டும். இலங்கையின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈழத்தமிழ் மக்களையும் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அவர்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அதோடு பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் வரை ஈழத்தமிழக பகுதிகளை ஈழத்தமிழர்களே ஆளவும் ஐ.நா. இடைக்கால நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும். சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க தனி ஈழமே தீர்வாகும்.
சர்வதேச கண்காணிப்பு நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் இருந்து இலங்கை பொருளாதார உதவியை நாடும் நிலையில் இலங்கைக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு, இந்திய அரசாங்கம் உட்பட சர்வதேச சமூகத்தை வலியுறுத்துகிறோம்.
கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் பிரச்னையை இந்தியா உற்றுநோக்கி வருகிறது. இந்திய அரசு, இலங்கையில் சீனாவின் இருப்பை விரும்பவில்லை. இந்தியாவில் பலர் சாலையோரங்களில் வசித்து வரும்போதிலும், இலங்கைக்குப் பல நூறு கோடி உதவிகளை அளித்துள்ளது என்றால் காரணமில்லாமல் இல்லை. எனவே, இதைக்கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் செயல்பட வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க:காமன்வெல்த் 2022 மேடையில் ஒலித்த யுவன் பாடல்