இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் உள்ள மொத்த இடங்களில் 25 விழுக்காடு, ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 8 ஆயிரத்து 628 தனியார் பள்ளிகளில் 1,15,771 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்காக இணையதளம் மூலம் 86 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 58 ஆயிரத்து 576 மாணவர்கள் மட்டுமே பள்ளிகளில் சேர்ந்தனர்.
அதைத் தொடர்ந்து, காலியாக உள்ள இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு மீண்டும் அக்டோபர் 12 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இது குறித்து மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி கூறும்போது, "தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு அக்டோபர் 12ஆம் தேதி முதல் நவம்பர் 7 வரை ஆன்லைன் மூலம் 16,502 விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன. அவர்களில் தகுதியான மாணவர்களின் பட்டியல் நாளை (நவம்பர் 11) வெளியிடப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை இணையதளம், பள்ளியின் தகவல் பலகையில் நாளை மறுநாள் (நவம்பர் 12) வெளியிடப்பட உள்ளது" என்றார்.