இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பிராட்வேயில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பாமக தலைமையகம் அறிவித்தது. அதனடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாமக தொண்டர்கள் பேருந்து, வேன், கார்களில் தலைநகர் சென்னையை நோக்கி வந்தனர்.
கரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னையில் போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் நடத்த காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் போராட்டத்திற்கு வந்த பாமக தொண்டர்களை பெருங்களத்தூர்,கானாத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட சென்னையின் எல்லை பகுதிகளில் ஆங்காங்கே தடுத்து நிறுத்திய காவல்துரையினர் கைது செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாமக தொண்டர்கள் பெருங்களத்தூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, சிலர் மின்சார ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அத்துடன், பல்வேறு இடங்களில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தி, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பாமகவினரின் போராட்டம் காரணமாக சென்னையின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இன்று ஒரேநாளில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதாக ஏறத்தாழ இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வலுக்கும் இடஒதுக்கீடு போராட்டம்: பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு முதலமைச்சர் அழைப்பு!