கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்த நிலையில், கடந்த காலண்டில் அது மீட்சியைக் கண்டது.
இதையடுத்து, நாட்டின் வர்த்தக நடவடிக்கையை ஊக்குவிக்கும் விதமாக, வங்கி கடன் அளவானது நல்ல ஏற்றத்தை கண்டுள்ளது. வங்கியில் பலர் கடன் பெற முன்வருவது, பொருளாதார நடவடிக்கை ஆக்கப்பூர்வமாக இருப்பதை குறிக்கும்.
சிறுகுறு தொழில்துறை, வேளாண்துறை, உற்பத்தித் துறை ஆகியவை நல்ல ஏற்றத்தைக் காண, துறைசார் கடன் புழக்கம் அதிகரிக்க வேண்டும்.
இது தொடர்பான புள்ளிவிவரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் கடன் வளர்ச்சி 6.05 விழுக்காடாக உயர்ந்து தற்போது ரூ.105.49 லட்சம் கோடியாக உள்ளது. கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் கடன்தொகை ரூ.99.47 லட்சம் கோடியாக இருந்தது. குறிப்பாக வேளாண் மற்றும் சேவைத் துறைகளில் இந்த கடன் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.
அதேபோல், நாட்டின் வைப்புத்தொகையும் ரூ.144.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் இது ரூ.130.09 லட்சம் கோடியாக இருந்தது.
இதையும் படிங்க: வணிகம் 2020 : ஒரு பார்வை