நாட்டின் முன்னணி பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடந்த சில ஆண்டுகளாகவே கடும் நிதிச்சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. இந்நிறுவனத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் கரோனா பரவல் காரணமாக விமானப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிய நிலையில், ஏர் இந்தியாவின் நிதி நிலவரம் தற்போது மேலும் மோசமடைந்துள்ளது. தன் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவே நிர்வாகம் தவித்து வருகிறது. கடந்த மாதம் நிறுவனத்தின் வருவாய் 88 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ள நிலையில், ஊழியர்களின் ஊதியப்படிகள் 40 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் சம்பள பாக்கியை காரணம் காட்டி ராஜினாமா செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு பதில் கடிதம் அனுப்பிய நிர்வாகம், நிறுவனத்தின் நிதி நிலை சூழல் மோசமாகவுள்ளதால் ஊதியம் தருவதில் சிக்கல் உள்ளது எனவும், இனி ஊழியர் ஒருவர் ராஜினாமா செய்யும் பட்சத்தில் அதை வாபஸ் பெறும் நடைமுறை கிடையாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு 57,128 கோடி உபரி நிதி வழங்க ஒப்புதல் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு