தருமபுரி மாவட்டம் அரூரில் மொரப்பூர் வனச்சரகர் க.சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரூர் பொதுப்பணித்துறை பணியாளர்கள் குடியிருப்பு பகுதியிலுள்ள சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்த இருவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அதைத் தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், நீப்பத்துறை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (26), முனியப்பன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சந்தன மரம் வெட்டிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, இருசக்கர வாகனம், 165 கிலோ எடையுள்ள ரூ.3.30 லட்சம் மதிப்பிலான சந்தன மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.