உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 577 பேர் பாதிக்கப்பட்டும், 3 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகாரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சை வார்டு பாதுகாப்பில் இருந்த காவலருக்கு கரோனா தொற்று இன்று (ஜூன் 21) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் 27 வயதான காவலர் ஒருவர், கடந்த 35 நாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வார்டில் பாதுகாப்பு பணியாற்றி வந்துள்ளதாக அறிய முடிகிறது.
அதைத் தொடர்ந்து, அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவருக்கு சளி ரத்த மாதிரிகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவிட்-19 பாதிப்பிற்குள்ளான காவலர் வசித்து வந்த 3ஆவது மைல் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை தலைமை காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தலைமை காவலர் குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவரோடு தொடர்பில் இருந்த அனைவரும் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாநகரில் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.