நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி 522 பேர் கரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமானோர் நெல்லைக்கு வருவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, வெளியூர்களிலிருந்து வருபவர்கள் காவல் துறையினர் கண்களில் அகப்படாமல் தங்களது வீடுகளுக்குச் செல்கின்றனர். இதன்மூலம் வெளியூரிலிருந்து வருபவர்களைக் கண்காணிப்பது பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க நகரிலுள்ள பிரபலமான கடைகளில் அதிகளவு மக்கள் கூடுவதாலும் தொற்று வேகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நெல்லை மாநகராட்சிச் சுகாதார அலுவலர்கள் நாள்தோறும் நகரின் முக்கியப் பகுதிகளிலுள்ள பெரிய கடைகளில் ஆய்வு நடத்திவருகின்றனர்.
இச்சூழலில் நெல்லையில் நேற்று பிரபல ஜவுளிக் கடையான போத்தீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போத்தீஸ் சூப்பர் மார்க்கெட், பிரபல நகைக் கடையான ஜிஆர்டி உள்பட பல்வேறு கடைகள் மாநகராட்சி அலுவலர்களால் தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கடைகளில் மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் பொருள்கள் வாங்கியதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.