ஓசூர் அருகே தமிழ்நாடு - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இ-பாஸ் அனுமதியுடன் கார் உள்ளிட்ட வாகனங்களில் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்குச் செல்பவர்கள், எல்லைப்பகுதியில் தடுக்கப்பட்டு, அவர்களது முழு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
பின்னர், அவர்களது கைகளில் 'சீல்' வைக்கப்பட்டு, கர்நாடக மாநிலத்துக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு செல்பவர்களை, அந்த மாநில அரசு தனிமைப்படுத்தி வருகிறது.
இந்தப் பணிகளுக்காக, மாநில எல்லைப்பகுதியில், 200-க்கும் மேற்பட்ட மருத்துவத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் இரவு, பகலாக சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ்நாட்டிலிருந்து நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 கார்கள், கர்நாடக மாநிலத்திற்கு செல்வதாகவும், 1,500 முதல் 2 ஆயிரம் பேர் வரை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், கர்நாடக மாநிலத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் கர்நாடகம், மராட்டியம், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து இ-பாஸ் அனுமதியுடன் தமிழ்நாட்டிற்கு காரில் வருபவர்கள் மட்டும், அவர்களது முழு விவரங்களை தமிழ்நாடு எல்லையிலுள்ள சோதனைச்சாவடியில் பதிவு செய்து விட்டு, மேற்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.