ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணைப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன.
அணை நீர்த்தேக்கப் பகுதியில் நீர்வரத்து குறித்த கணக்கெடுப்பதற்குப் பொதுப்பணித் துறை ஊழியர்கள் பழத்தோட்டம் வழியாகச் செல்ல வேண்டியுள்ளது.
ஆனால், பழத்தோட்டத்து நுழைவுவாயிலில் இரவு நேர காவல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வனத்திலிருந்து வெளியேறிய காட்டுயானைகள் பழத்தோட்டத்தின் முகப்பு சுவரை உடைத்து தள்ளியது.
இதைக் கண்டு காவல் பணியில் இருந்த ஊழியர்கள் யானையை விரட்ட முயன்றபோது அந்த யானை ஊழியர்களைத் துரத்தியது.
இதைத் தொடர்ந்து, பழத்தோட்டதிலிருந்து அணை பூங்காவுக்குள் நுழைந்த யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை முறித்து சேதப்படுத்தியது.
இதனால், இரவு நேரத்தில் அணையில் நீர்வரத்து கணக்கீடு எடுக்கச் செல்லும் ஊழியர்கள் யானைகளின் அச்சுறுத்தலால் பணிக்குச் செல்ல தயங்குகின்றனர்.
இது குறித்து பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் சிங்கார வடிவேலு வனத் துறையினரிடம் அளித்தார்.
அதனடிப்படையில், வனத் துறையினர் யானைகளைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.