சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பார் அசோசியேஷன் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பரவல் காரணமான கடந்த 90 நாள்களாக எந்த வழக்குகளும் நேரடியாக விசாரிக்கப்படுவது இல்லை. ஜூன் முதல் வாரம் மட்டும் நேரடியாக விசாரிக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து கரோனா நோய்த் தொற்று அச்சத்தால் நீதிமன்றத்தில் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்படவில்லை.
வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக வழக்குகள் விசாரிக்கப்படுகையில், பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் எழுகின்றன. வழக்குரைஞர்களால் வாதங்களையும் தெளிவாக முன்வைக்க முடிவதில்லை. ஆகவே, நேரடி விசாரணைக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதிகளின் அறைகளில் இருந்து விசாரிக்க, வழக்குரைஞர்கள் நீதிமன்ற அறைகளில் இருந்து வாதிடும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கலாம்.
வழக்குரைஞர்கள் தங்களின் வழக்குகள் முடிந்தவுடன் நீதிமன்ற அறையை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் உள்பட பல கட்டுப்பாடுகளுடன் நீதிமன்ற அறையில் நேரடியாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கலாம்.
வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்படாததோடு, முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படுவதால், பல வழக்குரைஞர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆகவே, உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகளை நேரடியாக விசாரிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.