சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் இருசக்கர வாகனங்களைத் திருடியதாகக் கைதான இருவருக்கு கரோனா பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
திருட்டு வழக்கு குறித்து விசாரணை செய்த காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட எட்டு காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதவிர மாநகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் 111 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் சேலம் நகர பகுதியில் 30 பேர், வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, மேச்சேரி உள்ளிட்ட இடங்களில் 10 பேர், புறநகர்ப்பகுதிகளில் சுமார் 22 பேர், அமெரிக்காவிலிருந்து சேலம் திரும்பிய 2 பேர், மாலத்தீவுகளிலிருந்து சேலம் திரும்பிய 3 பேர், விழுப்புரம் 8 பேர், சென்னை 3 பேர், மதுரை 3 பேர், தருமபுரி 3 பேர், செங்கல்பட்டு 3 பேர் என மொத்தம் 86 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அதேபோல ராஜஸ்தான் 7 பேர், கேரளம் 7 பேர், மகாராஷ்டிரா 7 பேர், மத்தியப் பிரதேசம் 7 பேர், தில்லி 7 பேர் உள்பட 25 பேர் என மாவட்டத்தில் மொத்தம் 111 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தற்போது சேலம் மாவட்டத்தில் 599 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 229 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். சுமார் 368 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா கிசிச்சையிலிருந்து குணமடைந்த 24 பேர் வீடு திரும்பினர். இவர்கள் தாரமங்கலம், ஆத்தூர், ஓமலூர், கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களை மருத்துவமனை முதன்மை மருத்துவர் பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் வழியனுப்பி வைத்தனர்.
மேலும், சேலம் மாநகர்ப்பகுதிகளில் கரோனா வேகமாகப் பரவிவருவதை அடுத்து கிச்சிப்பாளையம், தாதகாப்பட்டி, ஜாகிர் அம்மாபாளையம், பிரகாசம் நகர், எல்லீஸ் நகர், தில்லை நகர் உள்ளிட்ட 12 பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது .
இந்தப் பகுதிகளில் கரோனா தொற்று இடர் இருப்பதால் பகுதிவாழ் மக்கள் வெளியே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெளியாள்களும் இந்த 12 பகுதிகளுக்குள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விபத்தில் மகள் உயிரிழப்பு: ஆதரவின்றி திரிந்த மூதாட்டிக்கு உதவிய தன்னார்வலர்கள்