திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த இராந்தம் கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்தது. இந்தக் கடை ஊரடங்கால் திறக்கப்படாமலிருந்த நிலையில், தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று கடை திறக்கப்பட இருந்தது.
இந்நிலையில் இராந்தம் கிராமத்தில் மூன்று பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால், நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்பதால், பாரதிய ஜனதா கட்சியின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் உத்தரவின்படி, துணைத்தலைவர் முருகன் தலைமையில் டாஸ்மாக் கடை முன்பு, பொதுமக்கள் கலந்து கொண்டு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் கடைக்கு எதிராகப் பெரியவர் முதல் சிறியவர் வரை ஏராளமானோர் கலந்துகொண்டு 'டாஸ்மாக் கடையைத் திறக்காதே, கரோனா தொற்று ஏற்படும் நிலையில் டாஸ்மாக் கடையைத் திறக்காதே' என பொதுமக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பாஜக ஒன்றியத் தலைவர் குமார், ஒன்றியப் பொருளாளர் சங்கர் உட்பட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.