திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பிள்ளையார் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் ஆனந்த் (22). இவர் நாகர்கோவிலிலுள்ள கலர் லேப் ஒன்றில் வேலை செய்து வந்தார். சுபாஷ் ஆனந்த் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவரின் காதலை அறிந்த அவரது பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுபாஷ் ஆனந்த்தை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் ஆனந்த், தன்னை தேட வேண்டாம் என்று பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.
அன்று முதல் சுபாஷ் ஆனந்த்தை காணாததால் அவரது தாயார் கோட்டார் காவல்நிலையத்தில் காணாமல்போன தனது மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுபாஷ் ஆனந்த்தை தேடிவந்தனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலை இரண்டாம் மடம் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன் தலைமையிலான காவலர்கள் சோதனை செய்தனர். அங்கு அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது தெரியவந்தது.
பின்னர் அது காணாமல் போன சுபாஷ் ஆனந்தின் சடலம் என்பதும், சடலத்தின் அருகில் இரண்டு மது பாட்டில்களும் விஷ மருந்து பாட்டிலும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காவல் துறையினர் விசாரணையில், சுபாஷ் ஆனந்த் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, காவல் துறையினர் சுபாஷ் ஆனந்தின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மலை அடிவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுபாஷ் ஆனந்தின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.