ஹைதராபாத் (தெலங்கானா): இந்தியத் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சி.டி.எஃப்.டி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட குழந்தைகளுக்கான மரபணுக் கோளாறுகளைக் கண்டறியும் ஆய்வகத்தைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், “சி.டி.எஃப்.டி ஒரு தனித்துவமான நிறுவனம். உலகளவில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இச்சூழலில் குற்ற வழக்குகளில் சரியான தீர்ப்பும், நிவாரணமும் வழங்க சி.டி.எஃப்.டி உதவுகிறது. என்.ஐ.ஏ, சி.பி.ஐ. போன்ற அரசு புலனாய்வு அமைப்புகளுக்கும், நீதிமன்றங்களுக்கு இதன் அதிநவீன டி.என்.ஏ, கைரேகை கண்டறியும் தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருக்கிறது. அதனால் தான் நாங்கள் இதை ஒரு தனித்துவமான நிறுவனம் என்று அழைக்கிறோம், " என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாம் விவசாயம் குறித்து இன்னும் தீவிர ஆய்வு செய்யவேண்டும். நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயமாகும். இந்தியாவில் 60 விழுக்காடு மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலையே நம்பி இருக்கின்றனர். அதனாலேயே விவசாயம் சார்ந்து நாம் மேம்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவேண்டும்” என்றார்.