ஹைதராபாத்: உலகம் முழுவதும் வரும் 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. எனினும், காதலர் தின வாரம் கடந்த 7ம் தேதி ரோஜா தினத்துடன் (ரோஸ் டே) தொடங்கியது. காதலர் தின வாரத்தின் ஒவ்வொரு நாளும், வெவ்வெறு கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொதுவாகவே, காதலர் தினத்தன்று ஒவ்வொருவரும் தங்கள் இணைக்கு வழங்கும் பரிசுகள், மகிழ்ச்சியான நினைவுகளைத் தரும். அந்தப் பரிசு எளிதில் மறக்க முடியாததாகவும், நீண்ட நாள் நினைவில் நிற்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பது காதலர்களின் விருப்பம்.
காதலர் தினத்தன்று கொடுக்கக் கூடிய பரிசு, நிச்சயம் தமது இணையை வெகுவாக கவர வேண்டும் என்ற எண்ணத்தில், எந்த பரிசுப் பொருளை வாங்கலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையுடன் இருப்பவர்கள் ஏராளம்.
ரோஜாப்பூ: காதல் வெளிப்பாட்டின் மிக முக்கிய அடையாளம் இது. அன்பை வெளிப்படுத்தும் ரோஜாப்பூவை, நமது காதல் இணைக்கு வழங்கலாம். அது அவர்களுக்கு காதலர் தினத்தின் சிறந்த பரிசாக இருக்கும்.
கேண்டில் லைட் டின்னர்: இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி ஒளியில், இணையுடன் பொழுதை கழிப்பதே அலாதியானது தான். விரும்பிய உணவை வாங்கிக் கொடுத்து, அன்பைப் பரிமாறலாம்.
புத்தகம்: உங்கள் காதல் இணை புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், காதலை வெளிப்படுத்தும் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம். காதல் தொடர்பான கதை, நாவல்களை பரிசளிக்கலாம்.
அணிகலன்கள்: பொதுவாக ஆண்களை விட பெண்கள், மோதிரத்தை விரும்புவார்கள். எனவே மோதிரம், செயின் ஆகிய ஆபரணங்களை பரிசாக வழங்கலாம்.
மரக்கன்று: சிலருக்கு மரக்கன்றுகளை தோட்டங்கள் மற்றும் வீடுகளில் வளர்ப்பது பிடிக்கும். அவர்களுக்கு பிடித்தமான அலங்கார செடிகளை பரிசாக அளித்து, காதலை வலுப்படுத்தலாம்.
மொத்தத்தில் உங்கள் இணை மிகவும் விரும்பும் பொருட்களை, அவர்களுக்குப் பரிசாக வழங்கினால், காதலர் தினம் மேலும் தித்திக்கும்.
இதையும் படிங்க: Promise Day 2023: காதலர் தின வாரத்தில் சிறந்த "7" வாக்குறுதிகள்